புதுடெல்லி,
தற்போது, ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆணாக இருந்தால், 40 சதவீத சலுகையும், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் கட்டண சலுகையால், ரெயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுகிறது.
புதிய முறை
எனவே, இதை குறைக்க ரெயில்வே துறை புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ‘உங்களுக்கு கட்டணத்தில் பாதி சலுகை வேண்டுமா? அல்லது முழு சலுகை வேண்டுமா?’ என்ற கேள்வி கேட்கப்படும்.
இதற்கு மூத்த குடிமக்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, கட்டண சலுகை அளிக்கப்படும். பாதி சலுகை போதும் என்று கூறினால், அதற்கேற்ப ரெயில்வேயின் இழப்பு குறையும்.
எப்போது அமல்?
இந்த புதிய முறைக்காக, டிக்கெட் வழங்கும் சாப்ட்வேரை தரம் உயர்த்த வேண்டி உள்ளது. அந்தப்பணி முடிந்த பிறகு, இந்த புதிய முறை அமலுக்கு வரும்.
இருப்பினும், மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு, மூத்த குடிமக்கள் அல்லாத பொதுவான பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரெயில்வே செய்தித்தொடர்பாளர் அனில் சக்சேனா தெரிவித்தார்.
பயணிகளுக்கு அளிக்கும் மானியத்தால், ரெயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. ரெயில்களை இயக்க ஏற்படும் மொத்த செலவில், 57 சதவீத தொகை மட்டுமே திரும்ப கைக்கு வருவதாகவும், மீதி 43 சதவீத தொகை, நஷ்டமாகி வருவதாகவும் ரெயில்வே துறை கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக